திருவாரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி
திருவாரூரில் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது.
HIGHLIGHTS
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு துறை இணைந்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான திருவாரூர் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நான்கு பிரிவுகளாக நடத்தியது.
இதில் கை,கால் ஊனமுற்றோருக்கான ஓட்டப் போட்டி, நீளம் தாண்டுதல், கூடைப்பந்து போட்டி பார்வையற்றோருக்கான நின்ற நிலையில் தாண்டுதல், ஓட்டப் போட்டிகள், குண்டு எறிதல், கிரிக்கெட் பந்து எறிதல், காது கேளாதோருக்கான ஓட்டப்போட்டி, நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பள்ளிகளில் படிக்கும் 96 மாணவர்கள் 50 மாணவிகள் உள்ளிட்ட 146 மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். வெற்றி பெற்ற மாணவர்கள் தமிழ்நாடு அளவில் நடக்கும் போட்டிகளுக்கு திருவாரூர் மாவட்டம் சார்பில் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகுவேந்தன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா, ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் தலைவர் ராஜ் கருணாநிதி, மண்டல உதவி ஆளுநர் ராமதுரை, மாற்றுத்திறனாளி பள்ளி சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.