ஆதரவற்ற 38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள்
தமிழகம் முழுவதும் கால்நடைத்துறை சார்பில் 38 ஆயிரம் ஆதரவற்ற பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, தலா 5 ஆடுகள் வழங்கப்பட உள்ளது.
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் ஆதரவற்ற 38 ஆயிரம் பெண்களை தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் தலா 5 விலையில்லா ஆடுகள் வழங்கப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள (கணவனை இழந்த, கைவிடப்பட்ட, ஆதரவற்ற) 38 ஆயிரம் பெண்களை தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் தலா ஐந்து (செம்மறியாடுகள் அல்லது வெள்ளாடுகள்) ஆடுகள் வழங்க தமிழக அரசு ரூ.75 கோடியே 63 லட்சம் ஒதுக்கி உள்ளது. தமிழக கால்நடைத்துறை மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மொத்தம் 38 ஆயிரம் பெண்களுக்கு ஒரு லட்சத்து 90 ஆயிரம் ஆடுகள் வழங்கப்பட உள்ளது.
இந்த பயனாளிகளில் 30 சதவீதம் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினரைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். நிலங்கள் இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும். ஆதரவற்ற பெண்கள் 60 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும் எனவும், பயனாளிகள் ஏற்கனவே ஆடுகள், மாடுகள் வைத்திருக்க கூடாது எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
தகுதி வாய்ந்த பெண்களை தேர்ந்தெடுக்கவும், திட்ட செயல்பாடுகளை முறைப்படி கண்காணிக்கவும், ஒவ்வொரு பகுதியிலும் கால்நடைத்துறையின் துணை இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. திட்ட பயனாளிகள் தங்களது விண்ணப்பத்தை தங்கள் பகுதிக்கு உட்பட்ட கால்நடை கிளை நிலையங்களில் வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.