தஞ்சை எஸ்பி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
தஞ்சையில் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் திருமண ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
HIGHLIGHTS
உயிருக்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் திருமண ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா திருவிசநல்லூர் அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன். இவர் பேராவூரணி தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மகாலட்சுமி (வயது 21). பி.காம். பட்டதாரி. கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் கடந்த 3-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் பாதுகாப்பு கேட்டு மகாலட்சுமி, தனது காதல் கணவருடன் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார். பின்னர் அவர் போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியாவிடம் ஒரு மனு கொடுத்தார்.
அதில் கூறியிருப்பதாவது, நான் எனது உறவுக்காரன பிரவீன் என்பவரை காதலித்து வந்தேன். இது எனது பெற்றோருக்கு தெரிய வந்தும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, என்னை மிரட்டி வேறு ஒருவருக்கு, எனது விருப்பத்திற்கு மாறாக கட்டாய திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். இது பிடிக்காததால் நான் கடந்த 3-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறி, பிரவீனும் நானும் நண்பர்கள் முன்னிலையில் திருவைக்காவூர் குடியாளம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டோம். இந்த நிலையில் எனது பெற்றோர் மற்றும் உறவினர்கள், எனது கணவரின் சகோதரர் ராகேஷை பிடித்து வைத்துக்கொண்டு, நாங்கள் இருவரும் பிரிந்து வரவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள். இதனால் எங்கள் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து உள்ளது. எனவே எங்களை காப்பாற்றுவதோடு, ராகேஷை விட்டுவிட நடவடிக்கை எடுப்பதோடு, சம்பந்தப்படடவர்களை அழைத்து உரிய விசாரணை செய்வதோடு, எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.