தஞ்சையில் மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்- இருவர் கைது
தஞ்சையில் இரு இடங்களில் மணல் கடத்தி வந்த 3 மாட்டு வண்டிகளை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
HIGHLIGHTS
தஞ்சை அருகே மேலசித்தர்காடு பகுதியில் தாலுகா இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் ரோந்து பணி மேற்கொண்டார். அப்போது அவ்வழியே வந்த 2 மாட்டு வண்டிகளை மறித்து சோதனை செய்தார். அதில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து மாரியம்மன்கோவில் மேலசித்தர்காட்டை சேர்ந்த கலியபெருமாள் மகன் சபாபதி (45), சாமிநாதன் மகன் ரவிக்குமார் (45) இருவரையும் கைது செய்தார். மேலும் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் தஞ்சை அருகே எருக்கம்பள்ளம் வெண்ணாற்றங்கரை பகுதியில் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் ரோந்து பணியில் இருந்த போது, அவ்வழியே வந்த மாட்டு வண்டியை மறித்தார். போலீசை கண்டதும் மாட்டு வண்டியில் வந்தவர்கள் தப்பியோடி விட்டனர்.
இதையடுத்து மணல் கடத்தி வந்த அந்த மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து கோவிந்தசாமி மகன் ரமேஷ், சாமிநாதன் மகன் கோடீஸ்வரன் ஆகியோரை தேடி வருகிறார்.