10,813 தபால் வாக்குகள்-தஞ்சாவூர் கலெக்டர் பேட்டி
தஞ்சாவூர் மாவட்டத்தில் 10,813 தபால் வாக்குகள் இதுவரை பெறப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.
காவல்துறை மற்றும் காவல் நிலையங்களில் பணிபுரியும் அலுவலர்கள் இன்று தங்களுடைய தபால் வாக்கினை தஞ்சை வருவாய் கோட்ட அலுவலகத்தில் பதிவு செய்தனர். இதே போல் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் அந்த தொகுதிக்கு உட்பட்ட அலுவலகத்தில் போலீசார் தபால் வாக்குகளை செலுத்தினர்.
தபால் வாக்குகள் நடைபெறுவதை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதுவரை, அரசு ஊழியர்களின் தபால் வாக்குகள் 8,383 பெறப்பட்டுள்ளதாகவும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 2,430 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளதாகவும், தஞ்சை மாவட்டத்தில் மொத்தம், இதுவரை 10,813 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.