தஞ்சையில் தொடர் மழையினால் தீபாவளி வியாபாரம் பாதிப்பு
தஞ்சையில் தொடர் மழையினால் தீபாவளி வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
HIGHLIGHTS
நாடு முழுவதும் வருகிற நான்காம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தஞ்சை மாநகரில் தெற்கு வீதி, காந்திஜி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5,000 க்கும் மேற்பட்ட தரைகடை வியாபாரிகள் கடைகள் அமைத்துள்ளனர்.
திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து வந்துள்ள வியாபாரிகள் சுடிதார், பணியன் உள்ளிட்ட கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்கனவே வியாபாரம் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து திருப்பூரை சேர்ந்த வியாபாரி சீனிவாசன் கூறுகையில், சுமார் 2 லட்சத்திற்கும் மேல் முதலீடு செய்துள்ளதாகவும், ஆனால் போட்ட முதலீடு கூட தங்களுக்கு கிடைக்குமா என்கிற பயத்தில் உள்ளளதாகவும், ஒரு நாள் கூலி கூட தங்களுக்கு வியாபாரம் ஆகவில்லை என வேதனையுடன் தெரிவித்தார். தொடர்ந்து மழை பெய்தால் தங்களுடைய வாழ்வாதாரம் கேள்வி குறியாகிவிடும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.