கடன்சுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை
ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தமாக ஏற்கெனவே அதிகளவில் கடன் வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
HIGHLIGHTS
கடன் தொல்லை காரணமாக, மகனை கழுத்தை நெறித்துக் கொலை செய்துவிட்டு, பெற்றோர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தஞ்சையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை அருகே உள்ள மேலவெளி ஊராட்சி மனோ நகரை சேர்ந்தவர் ராஜா ( 37). ரியல் எஸ்டேட் அதிபர். இது தவிர தஞ்சை பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் சொந்தமாக டீ கடை வைத்துள்ளார். இவரது மனைவி கனகதுர்கா. இவர்களுக்கு ஸ்ரீவர்ஷன் (11) என்ற ஒரு மகன் உள்ளார். இவர் தனியார் பள்ளி ஒன்றில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார்.கூடுதலாக, ராஜா ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். இந்தத்தொழில் சம்பந்தமாக ஏற்கெனவே அதிகளவில் கடன் வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றிரவு கனகதுர்கா தனது தம்பிக்கு நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டனர். காலையில் தனது அக்கா அனுப்பிய தகவலை பார்த்த தம்பி அதிர்ச்சி அடைந்து, வீட்டிற்குச் சென்று பார்த்த போது, அக்கா மகன் படுக்கையிலும், அக்கா கணவர் ராஜா, அக்கா கனகதுர்கா ஆகியோர் தூக்கில் தொக்கிய நிலையிலும் இறந்து கிடந்தனர். இதனையடுத்து அங்கு வந்த கள்ளபெரம்பூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜா கடன் சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தஞ்சையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.