நாச்சியார்கோவில் அருகே முகக்கவசம் அணியாத இளைஞரை தாக்கிய காவல்துறை
நாச்சியார்கோவில் அருகே முகக்கவசம் அணியாத இளைஞரை காவல்துறையினர் தாக்கியது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது
HIGHLIGHTS
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார் கோவில் போலீசார், தெற்கு வீதியில் வாகன சோதனை ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக நாச்சியார் கோவில் பொன்னியம்மன்கோவில் தெருவை சேர்ந்த பிரபு என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் அங்குள்ள ரேசன் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக வந்துள்ளார்.
மாஸ்க் போடமல் வந்த அவரை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்துள்ளனர். ஆனால் அவர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவரை காவலர் கலைச்செல்வன் சிறிது தூரம் ஓடிசென்று பிடித்துள்ளார். மேலும் பிரபுவை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவரும் ஒருவருக்கொருவர் தங்களை சரமாரியாக தாக்கி கொண்டுள்ளனர்.
இதனை பார்த்த அங்கிருந்த ஆயுதப்படை காவலர்கள் பிரபுவை சுற்றிவளைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து போலீஸ் ஜீப்பில் ஏற்றி நாச்சியார்கோவில் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து பிரபு மீது காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது, பொது இடத்தில் தரக்குறைவாக பேசியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பிரபு நாச்சியார் கோவில் அமமுக பொருளாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.