மரக்கடைக்கு தீ வைப்பு: கைது செய்யக்கோரி இந்து முன்னணியினர் மறியல்
புளியங்குடியில், மரக்கடைக்கு தீ வைத்தவர்களை கைது செய்யக்கோரி, இந்து முன்னணி அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம், புளியங்குடி சேர்ந்த இந்து முன்னணி நகர தலைவர் சரவணன். இவருக்கு சொந்தமான மரக்கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து தப்பியோடினர். இதில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரச் சாமான்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போராடி, தீயை அணைத்தனர்.
மரக்கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளதால், உடனடியாக மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி, இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர், புளியங்குடியில் ராஜபாளையம் - தென்காசி செல்லும் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த, தென்காசி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலிவரதன் தலைமையிலான காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.