600 அடி உயரத்தில் காமராஜர் சிலை அமைக்க விஜய் வசந்த் எம் பி. கோரிக்கை
600 அடி உயரத்தில் காமராஜர் சிலை அமைக்க விஜய் வசந்த் எம் பி. நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்து பேசினார்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலா தளங்களை மேம்படுத்தவும் காமராசருக்கு சிலை அமைக்கவும் நாடாளுமன்றத்தில் விஜய் வசந்த் எம். பி கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை சமர்ப்பித்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலா தளங்களை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் குமரி மாவட்டத்தில் தேவையான ரயில் மற்றும் விமான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலாவுக்கு வர பிற மாநில மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர் என்பதை சுட்டிக்காட்டிய எம்.பி. விஜய் வசந்த் அவர்கள் சுற்றுலா பயணிகள் பயன் பெறும் வகையில் முதல் கட்ட நடவடிக்கையாக கன்னியாகுமரிக்கு வரும் ரயில்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி குமரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கையான விமான நிலையத்தையும் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் .
ஒரு புறம் கடலாலும் மற்றொரு புறம் மலைகளாலும் சூழப்பட்டு பச்சை பசேல் என இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். ஆனால் வசதிகளை அதிகரித்தால் கன்னியாகுமரி உலகத்தரம் வாய்ந்த ஒரு சுற்றுலா நிலையமாக அமையும் என விஜய் வசந்த் எம். பி. எடுத்துக்கூறினார். மேலும் மிகப் பழமையான வரலாற்று சிறப்புமிக்க வழிபாட்டு தலங்களை கொண்டிருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களை மேம்படுத்தி ஒரு ஆன்மீக சுற்றுலாத் தலமாக கன்னியாகுமரி மாவட்டத்தை மாற்ற இயலும். மகா சிவராத்திரி அன்று குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள 12 சிவாலயங்களுக்கு இடையே நடைபெறும் சிவாலய ஓட்டத்தை எடுத்துக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மத்திய அரசின் பிரசாத் திட்டத்தின் மூலம் இந்த கோவில்களை இணைக்கும் சாலைகளை மேம்படுத்தி மக்கள் அதிகமாக இந்த கோவில்களுக்கு சென்று வர கோயில்களின் சுற்றுவட்டம் மற்றும் இணைப்பு சாலைகளை மேம்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளை சீரமைத்து மேம்படுத்தினால் இந்த கடற்கரைகள் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலங்களாக மாறி இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்க முடியும். மேலும் அழகான மலைத்தொடர்கள், அருவிகள், அணைகள் என சுற்றுலாவுக்கு தேவையான அனைத்தையும் வரமாக பெற்றுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு அதிக கவனம் செலுத்தி சுற்றுலாவை மேம்படுத்துவதன் மூலம் இங்குள்ள மக்களுக்கு அது வேலைவாய்ப்புக்கான வழிவகையை செய்து தரும் எனவும் எம்.பி. விஜய் வசந்த் சுட்டிக்காட்டினார்.
குஜராத் மாநிலத்தில் சர்தார் பட்டேல் அவர்களுக்கு 600 அடி உயரத்தில் சிலை அமைத்து சுற்றுலா பயணிகளை ஈர்த்தது போல கன்னியாகுமரியிலும் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜருக்கு வானளாவிய சிலையமைத்து உலக சுற்றுலா பயணிகளை ஈர்க்க வேண்டும் எனவும் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்தார்.