தோரணமலை முருகன் கோயிலில் வருண கலச பூஜை: திரளான பக்தர்கள் பங்கேற்பு
தென்காசி மாவட்டம் தோரணமலை முருகன் கோயிலில் விவசாயம் செழிக்க வேண்டி வருண கலச பூஜை நடைபெற்றது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் தோரணமலை முருகன் கோயிலில் விவசாயம் செழிக்க வேண்டி வருண கலச பூஜை நடைபெற்றது.
தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளியன்றும், மழை வேண்டியும், விவசாயம் தழைக்க வேண்டியும் வருண கலச பூஜை நடைபெற்று வருகிறது. அதன்படி மாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையான இன்று காலை வருண கலச பூஜை நடைபெற்றது.
இதற்காக அதிகாலையில் பக்தர்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து சப்த கன்னியர்கள், விநாயகர் மற்றும் தெய்வங்களுக்கும், மலை அடிவாரத்தில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, நெல் நாற்று வைத்து வருண கலச பூஜை நடைபெற்றது.
மேலும் மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகருக்கு சிறப்பு அபிஷேகம், தென்காசி சிவ பூதகண நாதர் வாத்திய குழூவினரின் பஞ்ச வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் தலைமையில் செய்திருந்தனர்.