பழைய குற்றாலம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய இரண்டு பேர் கைது
பழைய குற்றாலம் பகுதியில், கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டிருந்த இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர். 50 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் போதைப் பொருட்களான கஞ்சா, குட்கா, புகையிலைப் பொருட்கள் போன்ற போதை வாஸ்துகளின் பயன்பாடுகளை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பல்வேறு இடங்களில் போலி மது மற்றும் கள்ளச்சாராய பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதே தடுக்க காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருகே உள்ள ஆயிரப்பேரி, பாட்டப்பத்து கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பில் கள்ளச்சாராயம் . காய்ச்சப்படுவதாக குற்றால போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அங்கு விரைந்து சென்ற போலீசார், அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது, ஆயிரப்பேரி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் பராமரித்து வரும் தென்னந்தோப்பில் உள்ள ஒரு மோட்டார் செட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டு இருப்பது தெரியவந்தது.
அதனைதொடர்ந்து, அந்த பகுதிக்கு போலீசார் சென்றபோது, போலீசாரை பார்த்த மூன்று நபர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தனர். போலீசார் அவர்களை விரட்டி சென்றபோது, ஆயிரப்பேரி பகுதியை சேர்ந்த முருகையா என்பவரது மகன் கனகராஜ் (வயது 31) மற்றும் பாட்டப்பத்து பகுதியை சேர்ந்த மாடசாமி என்பவர் மகன் ராமகிருஷ்ணன் (வயது 46) என்ற இருவரும் போலீசார் பிடியில் சிக்கினர்.
முக்கிய குற்றவாளியான ஆயிரப்பேரி பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 25) என்பவர் போலீசார் பிடியிலிருந்து தப்பி ஓடினார். பிடிபட்ட இரண்டு நபர்களிடமிருந்து 50 லிட்டர் மதிப்பிலான கள்ளச் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முக்கிய குற்றவாளியான கண்ணன் என்பவரை தேடி வருகின்றனர்.