குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அரபிக்கடல் மற்றும் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலங்கள் ஒன்று குற்றாலம். இங்கு ஐந்தருவி, சிற்றருவி, குற்றாலம் பிரதான அருவி, புலி அருவி, பழைய குற்றாலம் மற்றும் குளிக்க அனுமதி இல்லாத தேனருவி மற்றும் செண்பகாதேவி அருவி ஆகிய அருவிகள் உள்ளன. மழைக்காலங்களில் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அருவிகளை தீவிரமாக கண்காணித்து அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தென்காசி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை சிறிது நேரம் கன மழை பெய்தது. இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மதியத்திற்கு மேல் கன மழை பெய்யத் தொடங்கியது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குற்றாலம் பிரதான அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் கொட்டியதால் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள், மற்றும் ஐயப்ப பக்தர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஐந்தருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு நலன் கருதி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் குளிக்க தடை விதித்துள்ளனர்.