கேரளாவில் விலை உயர்வு: தமிழக எல்லையில் எரிபொருள் நிரப்பும் வாகனங்கள்
கேரளாவில் எரி பொருள்கள் விலை உயர்வு எதிரொலியாக தமிழக எல்லையில் எரிபொருள் நிரப்புவதால், பங்க் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
HIGHLIGHTS
கேரளாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு எதிரொலி- தமிழக-கேரளா எல்லை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வரிசை கட்டி நிற்கும் கேரள வாகனங்கள்.
கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்ததன் எதிரொலியாக, தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் அனைத்து வாகனங்களும், தமிழக- கேரள எல்லைப் பகுதியில் உள்ள கேரளா வாகனங்களும் தமிழகத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பி வருகின்றன.
குறிப்பாக, கேரள மாநிலத்தை விட டீசல் விலையானது தற்போது 2 ரூபாய் 93 காசுகளும், பெட்ரோல் விலையானது கேரளாவை விட 5 ரூபாய் 75 காசுகள் குறைவாகவும் தமிழகத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, கேரளா வாகனங்களும் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் தமிழக வாகனங்களும் தமிழக- கேரளா எல்லைப் பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளிலே பெட்ரோல் மற்றும் டீசலை நிரப்பி வருகின்றனர்.
குறிப்பாக, தற்போது தமிழக-கேரளா எல்லை பகுதியான புளியரை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் சென்று வரும் சூழலில், கேரளாவிற்கு சரக்குகளை ஏற்றி செல்லும் அனைத்து லாரிகளுமே தமிழக- கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள புளியரை, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பங்கில் பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பி செல்கின்றனர்.
இதன் காரணமாக எல்லைப் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் கனரக வாகனங்கள் வரிசை கட்டி நின்று டீசலை நிரப்பி வரும் சூழலில், டீசல் விற்பனையானது அதிகமாகி பங்க் உரிமையாளர்கள் மிகவும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும், எல்லைப் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் கேரள மாநிலத்தை விட பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவு என்பதை விளம்பரப்படுத்தும் வகையில் டிஜிட்டல் ஸ்பேனர் வைத்து விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.