தென்காசி நகர மன்ற கூட்டம்: பண மழையில் குளித்து கவுன்சிலர் ஆர்ப்பாட்டம்
தென்காசி நகர்மன்ற கூட்டத்தில் வருவாய் ஆய்வாளர் அதிக லஞ்சம் வாங்குவதை சுட்டிகாட்டும் விதமாக அதிகாரிகள் முன் பண மழையில் குளித்து கவுன்சிலர் ஆர்ப்பாட்டம்.
HIGHLIGHTS
தென்காசி நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நகர்மன்ற சாதாரண கூட்டம் மன்ற தலைவர் சாதிர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்ற நிலையில் மன்ற பொருட்கள் வாசிக்கப்பட்டது. இதற்கிடையே நகராட்சியில் வீட்டு தீர்வை வசூல் செய்வதில் வருவாய் ஆய்வாளர் அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பலமுறை புகார் அளிக்கும் நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் வருவாய் ஆய்வாளர் அதிக அளவு லஞ்சம் வாங்குவதை சுட்டிக்காட்டும் விதமாக 10வது வார்டு கவுன்சிலர் ராசப்பா தான் கொண்டு வந்திருந்த வாலியில் இருந்து போலி ரூபாய் நோட்டுக்களை எடுத்து அதிகாரிகளுக்கு முன் குளித்தார்.
தொடர்ந்து லஞ்ச பண மழையில் வருவாய் அலுவலர் குளித்து வரும் நிலையில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார். அதிகாரிகள் முன்னிலையிலும் லஞ்சப் பணத்தை சுட்டிக்காட்டும் விதமாக கவுன்சிலர் பண மழையில் குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தங்களது வார்டுகளுக்கு இதுவரையும் எந்தவித நிதியும் ஒதுக்கப்படவில்லை என்று கூறி பாஜக கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார்.