தனியார் மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் சிறப்பு அதிகாரி வேண்டுகோள்...
முழு ஊரடங்கு உத்தரவு
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலின் வேகம் அதிகரித்து வரும் நிலையில் திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. இதனைக் குறித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் சுரண்டை பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கத்தில் வியாபாரிகள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியும் மாவட்ட உதவி திட்ட அலுவலர் தணிக்கை சக்கர நாராயணன் தலைமை வகித்தார். வீரகேரளம்புதூர் தாசில்தார் வெங்கடேஷ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார், சுரண்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிர்வாக அதிகாரி வெங்கட கோபு வரவேற்றுப் பேசினார்.
கூட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றின் வேகம் குறையவும் பொதுமக்களை கொரோனாவிலிருந்து பாதுகாக்கவும் அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியதாகவும், அதன்படி குறிப்பிட்ட கடையில் தவிர பிற கடைகள் செயல்படக் கூடாது எனவும் பொதுமக்கள வீட்டுக்குள்ளேயே இருக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்திற்காக நடைபெற்ற கூட்டத்தில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மனையின் பங்களிப்பு மிகவும் அவசியம் எனவும் ஆகவே சுரண்டையில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் 24 மணி நேரமும் இயங்க வேண்டும் எனவும் எந்தவித மருத்துவ வசதி தேவைப்பட்டு நோயாளிகள் வந்தாலும் அவர்களுக்கு தாமதமின்றி சிகிச்சை அளிக்கவும் அதன் பின்னர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் அதற்கு தேவையான உதவிகளை அரசு தரப்பில் செய்யப்படும் எனவும் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் சுரண்டை வியாபாரிகள் சங்க தலைவர் காமராஜ், செயலாளர் நடராஜன், துணைத்தலைவர் சிவசக்தி முத்தையா, செய்தி தொடர்பாளர் ராஜகுமார், ஓட்டல் உரிமையாளர் சங்க செயலாளர் ஜேக்கப், சுப்பிரமணியன், மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ், வெற்றிவேல், கணேசன், தேவேந்திரன், நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்க நிர்வாகிகள் மாடசாமி மற்றும் தனியார் மருத்துவமனை மேலாளர்கள் பங்கேற்றனர்.