பயிர்களுக்கு இழப்பீடு வழங்க கோரி பழனி நாடார் எம்.எல்.ஏ, ஆட்சியரிடம் மனு
பயிர்களுக்கு இழப்பீடு வழங்க கோரி பழனி நாடார் எம்.எல்.ஏ, தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷிடம் மனு அளித்தார்.
HIGHLIGHTS
தென்காசி சட்டமன்ற தொகுதியில் பருவமழை பொய்த்து போனதால் ஏற்பட்ட பயிர் நஷ்டத்திற்கு நிவாரண தொகை வழங்க கோரி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் ஆட்சியரிடம் மனு வழங்கினார்.
தென்காசி மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இங்குள்ள விவசாயிகள் நெல் ஆகியவற்றுடன் மக்காச்சோளம், உளுந்து, வெண்டை, தக்காளி போன்ற மானாவாரி காய்கறிகளையும் பயிரிடுவது வழக்கம்.
இந்த ஆண்டு விவசாயிகள் நெல், மக்காச்சோளம், உள்ளிட்ட பயிர்கள் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்தது. இதில், சுரண்டை, கருவந்தா, ஊத்துமலை, வீரகேரளம் புதூர் குறுவட்டங்களில் சுமார் ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம், உளுந்து, கானம், நெல் போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தது. தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனதால் சுரண்டை, கருவந்தா, ஊத்துமலை, வீரகேரளம்புதூர் குறுவட்டங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம், நெல் போன்ற பயிர்கள் கருகிய நிலையில் முழு விளைச்சல் இல்லாமல் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
இது தொடர்பாக விவசாயிகள் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடாரிடம் நிவாரணம் கேட்டு மனு அளித்திருந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் மாவட்ட தலைவருமான பழனி நாடார் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷிடம் மனு வழங்கினார்.
இதே போல் தென்காசி ஒன்றியத்திற்கு உட்பட்ட சில்லரைப்புரவு ஊராட்சியில் 1-வது வார்டு திரிகூடபுரம் பகுதியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்திட கோரியும், கீழப்பாவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குணராமநல்லுர் ஊராட்சியில் அருந்ததியர் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியில் சமுதாய நலக்கூடம் அமைத்து தரக் கேட்டும் மாவட்ட ஆட்சியர் ஆகாஷிடம் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் மனு வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது மாடசாமி சோதிடர், மாவட்ட பொதுச் செயலாளர் கனேஷன், காஜாமைதீன்,, மாவட்ட இளைஞர், காங்கிரஸ் செயலாாளர் சந்தோஷ், சித்திக் , சுரண்டை தேவேந்திரன், பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.