மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் அகிம்சை வழியில் போராட்டம்
சோனியா-ராகுல் ஆகியோரை கலங்கப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அமலாக்கத்துறையைக்கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது
HIGHLIGHTS
மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சத்யாகிரக போராட்டம்.
நேஷனல் ஹெரால்டு வழக்கு சம்பந்தமாக அமலாக்கத்துறை நேற்று விசாரணைக்கு சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியது. இதற்கு எதிர்ப்பு நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பகுதியில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவருமான பழனி நாடார் தலைமை வகித்து பேசுகையில், காங்கிரஸ் கட்சியின் சொத்து நேஷனல் ஹெரால்டு ஆகும். இதனை காங்கிரஸ் கட்சி எடுத்ததாக கூறி சுப்பிரமணிய சுவாமி தொடர்ந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தற்போது இருக்கும் பாஜக அரசு பழிவாங்கும் நோக்கில் விசாரணை எதுவும் செய்யாமல் சும்மா சம்மன் மட்டும் அனுப்பி உள்ளது இதனை கண்டித்து இன்று போராட்டம் நடத்துகிறோம். தொடர்ந்து மத்திய அரசு இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் தீவிரமான போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
இந்தப் போராட்டத்தில் சுரண்டை நகர் மன்ற தலைவர் வள்ளி முருகன், மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், தென்காசி வட்டாரத் தலைவர் பெருமாள், தென்காசி நகரத் தலைவர் காதர் மைதீன் உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.