தென்காசியில் உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
தென்காசியில், ஊரக உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் பார்வையாளர் பொ.சங்கர் தலைமையில் நடந்த கூட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
உள்ளாட்சித் தேர்தலின்போது கடைபிடிக்க வேண்டிய சட்டப்படியான நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, இதில் அறிவுரைகள் வழங்கப்பட்டன. மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் எத்தனை உள்ளன, கடந்த தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்ற வாக்குச்சாவடிகள் எவை என்பது குறித்தும், தேர்தல் பார்வையாளர் கேட்டறிந்தார்.
காவல்துறையினர் கவனமாகவும், சமயோசிதமாகவும் செயல்பட்டு, தேர்தல் நேர்மையாகவும் வன்முறைகள் இல்லாமல் நடைபெறுவதை உறுதி செய்யவும், வாக்குப்பதிவு நாளன்று தேவையான அளவு அதிவிரைவு படைகளை அமைத்து, சட்டம் ஒழுங்கை பேண வேண்டும் எனவும், தேர்தல் பார்வையாளர் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தரராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.