குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் 2-வது முறையாக ஒத்தி வைப்பு
குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலை, திமுக புறக்கணித்ததன் காரணமாக தேர்தல் 2-வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது
HIGHLIGHTS
தென்காசி மாவட்டத்தின் சுற்றுலா ஸ்தலமான குற்றாலம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 8 உறுப்பினர்களில் திமுக 4, அதிமுக 4 உறுப்பினர்கள் என சம பலத்துடன் உள்ளது. கடந்த 4-ஆம் தேதி நடந்த தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலை திமுகவினர் புறக்கணித்ததால் அப்போது தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. பேரூராட்சி கூட்ட அரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் (கலால்) துணை ஆணையர் ராஜமனோகர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் துணை ஆட்சியர் ஷீலா ஆகியோர் தேர்தலை நடத்த 9.30 மணி முதல் காத்திருந்தனர்.
ஆனால் அதிமுக உறுப்பினர்கள் 4 பேர் மட்டுமே கூட்ட அரங்கிற்கு வந்து இருந்தனர். திமுக உறுப்பினர்கள் இம்முறையும் புறக்கணிப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து 10.05 மணிக்கு தேர்தலை ஒத்தி வைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் 2-வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.