தனுஷ் படப்பிடிப்பிற்கு தடை: தென்காசி மாவட்ட நிர்வாகம் அதிரடி
தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படப்பிடிப்பிற்கு தடை விதித்து தென்காசி மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது
HIGHLIGHTS
நடிகர் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் என்ற படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் படமாக்கி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகளானது தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் சூழலில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பல கோடி செலவில், சிறிய கிராமம், கோயில் உள்ளிட்டவர்களை வடிவமைத்து செட் அமைத்து படப்பிடிப்பு காட்சிகள் ஆனது நடைபெற்று வந்தன.
75 சதவீத படப்பிடிப்பு காட்சிகள் தற்போது நிறைவடைந்ததாக கூறப்படும் சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்போது செட் அமைத்து படப்பிடிப்பு நடந்து வரும் படப்பிடிப்பு தளத்தில் முறையான அனுமதி இல்லாமல் வெடி வெடிப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இந்த பகுதியில் பயங்கர சத்தத்துடன் வெடி வெடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதால் வன விலங்குகள் அச்சத்திற்கு உள்ளாகி விவசாயப் பகுதிக்குள் நுழைவதாக விவசாயிகளும் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், இது தொடர்பாக வருவாய்த் துறையினர் மற்றும் வனத்துறையினர் ஆய்வு நடத்திய போது எந்த விதமான அனுமதியும் இல்லாமல் படப்பிடிப்பு நடத்தியது வந்தது தெரிய வந்துள்ளது.
அதனை தொடர்ந்து, தற்போது முறையான அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்திய நிலையில், தற்போது படப்பிடிப்பு நடத்துவதற்கு தடைவித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில், வனத்திற்கு மிக அருகாமையில் படப்பிடிப்பு தளம் அமைத்து மூன்று மாத காலங்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை வனத்துறையினரோ, அரசு அதிகாரிகளோ, காவல்துறையினரோ என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்போது படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் இரவு நேரத்தில் அளவுக்கு அதிகமான மின்விளக்குகள் எரிய வைத்து படம் பிடிக்கப்பட்டதால் அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானை ஒன்று அச்சத்தில் மத்தளம் பாறை பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து 500க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சாய்ந்து சேதப்படுத்தியது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து புகார் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் விவசாயிகள் பெருமளவில் நஷ்டம் அடைந்துள்ளதாகவும் இது போன்ற அலட்சியப் போக்கில் செயல்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.