தென்காசி அருகே நடைபெற்ற இரட்டை கொலை
தென்காசி மாவட்டம், ஊத்துமலை அருகே காட்டு பகுதியில் பால் வியாபாரி இருவர் வெட்டி கொலை செய்யப்பட்டனர். பிணத்தை கைபற்றிய போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்து விட்டு தப்பி ஓடிய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தனிபடை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். ஊத்துமலை அருகே உள்ள நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆனந்த் (26) சூரியராஜ் (17). இருவரும் அப்பகுதியில் பைக்கில் பால் வியாபாரம் செய்து வருகின்றனர். வழக்கமாக ஒரே பைக்கில் அருகில் உள்ள கிராமங்களான பலபத்ரராமபுரம், கங்கனா கிணறு மற்றும் சுற்று பகுதியில் பால் எடுத்துவிட்டு மீண்டும் இரவு 9.30 மணியளவில் நொச்சிகுளம் கிராமத்திற்கு திரும்புவர்.
ஆனால் நேற்று இரவு வெகு நேரமாகியும் இருவரும் ஊர் திரும்பாததால், உறவினர்கள் ஊத்துமலை காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். புகார் அளித்து விட்டு 11 மணியளவில் அவர்களை தேடி சென்றனர். அப்போது பலபத்ராமபுரம் அருகே உள்ள காட்டு பகுதியில் இருக்கும் தோட்டத்திற்கு பால் எடுக்க செல்லும் வழியில் மர்ம நபர்களால் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு ஊத்துமலை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குளம் டிஎஸ்பி சகாயஜோஸ், இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார், உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து தப்பியோடிய கொலையாளிகளை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இப்பகுதியில் இந்தக் கொலையோடு இந்த ஆண்டு இது ஒன்பதாவது கொலையாகும் என கூறப்படுகிறது.
தற்போது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், தகாத உறவினால் ஏற்பட்ட கொலை என்று தெரியவந்துள்ளது. மேலும் உடன் வந்த 17 வயது சிறுவன் இந்த கொலைக்கு ஆதாரமாகவும், சாட்சியும் ஆகி விடக்கூடாது என்பதற்காக சிறுவனையும் கொலை செய்துவிட்டு அந்த கும்பல் தப்பி ஓடி உள்ளது.
இதனையடுத்து இன்று அதிகாலை நொச்சிக்குளம் ஊர் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் அப்பகுதி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குற்றவாளிகளை அடையாளம் கண்டு விட்டோம். விரைவில் கொலையாளிகளை கைது செய்து விடுவோம் என்று காவல்துறையினர் உறுதி அளித்தனர். அதன் பேரில் பொதுமக்கள் மற்றும் உறவினகர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவி வந்தது.
ஊத்துமலை அருகே காட்டு பகுதியில் நடைபெற்றுள்ள இந்தக் கொடூர கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.