தேவகோட்டை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்துக்கு அடிக்கல்
மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் வழங்கிய ரூ.1.25 கோடி மேம்பாட்டு நிதி மூலம் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன
HIGHLIGHTS
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அரசு மருத்துவமனையில், டாடா குழும நிதியுதவியுடன் ஆக்ஜிஸன் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில், சிவகங்கை பாராளுமன்ற உறுபபினர் கார்த்தி ப. சிதம்பரம் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது: தமிழக மக்கள் உயர்தரமாக மருத்துவ கிசிச்சையினை பெற வேண்டும் என்பதற்காகவும், உயர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு செல்லாமல், அரசு மருத்துவமனைகளிலே மேற்கொள்ளும் பொருட்டு, அனைத்து மருத்துவமனைகளிலும் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகம் சுகாதாரத்துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக திகழ்கிறது.
கொரோனா நோய்த்தொற்று காலத்தில், தமிழக அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கையின் காரணமாக, கொரோனா நோய்த்தொற்று விரைந்து கட்டுப்படுத்தப்பட்டது. அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு 21 இலட்சம் கொரோனா நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில், ஏற்பட்ட ஆக்ஸிஜன் தேவைகளை கருத்தில் கொண்டு அதனை நிரந்தரமாக தீர்த்திட 500 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் டாடா குழுமத்தின் சமூக பொறுப்பு நிதியின் மூலம் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம், வழங்கிய ரூ.1.25 கோடி மேம்பாட்டு நிதியின் மூலம் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன. தனியார் நிறுவன பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நிதிகளை பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, டாடா குழும தமிழ்நாடு மண்டல துணைத்தலைவர் சுரேஷ்ராமன், இணை இயக்குநர் மருத்துவப்பணிகள் வே.ராஜசேகரன், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் ச.ராம்கணேஷ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆரோக்கிய சாந்தாராணி, முன்னாள் வாரியத்தலைவர் ஜோன்ஸ் ரூசோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.