கணவர் தலையிடுவதில் தவறு இல்லை: பெண் ஊராட்சி மன்றத்தலைவர் வாக்குவாதம்
எல்லா இடத்திலும் பெண் ஊராட்சி மன்றத் தலைவிகளின் கணவர்கள் தலையீடு இருக்கத்தான் செய்கிறது அதில் என்ன தவறு
HIGHLIGHTS
பஞ்சாயத்து தலைவரின் கணவர் ஊராட்சி மன்ற அலுவலக செயல்பாடுகளில் தலையிடுவதில் தவறு இல்லை கிராமசபை கூட்டத்தில் பெண் ஊராட்சி மன்றத்தலைவர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற குன்றக்குடி கிராம மக்கள், குன்றக்குடி ஊராட்சிமன்ற தலைவர் அலமேலு மங்கையின் கணவர் விவேகானந்தன் ஊராட்சி மன்ற தலைவர் இருக்கையில் அமர்ந்து கொள்வதாகவும் ஊராட்சி மன்ற அலுவலக பணிகளில் தலையிடுவதாக புகார் தெரிவித்தனர்.
மேலும், இது தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் கேட்ட பொழுது, அவருக்கு அவ்வாறு நடந்து கொள்ள எந்தவித அதிகாரம் இல்லை என்று பதில் வந்துள்ளதாக சுப்பிரமணியன் என்பவர், தான் வாங்கிய தகவல் அறியும் உரிமைச்சட்ட பதில் மனுவையும், போட்டோ ஆதாரத்தையும் கிராமசபை கூட்டத்தில் அளித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.
அப்போது குறுக்கிட்ட குன்றக்குடி ஊராட்சி மன்ற தலைவர் அலமேலு மங்கை, எல்லா இடத்திலும் ஊராட்சி மன்றத் தலைவிகளின் கணவர்கள் தலையீடு இருக்கத்தான் செய்கிறது. அதில் என்ன தவறு என்று கிராம மக்களிடம் விளக்கமளித்தார். இதனால் கூட்டத்தில் இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர்.