ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம்
இலங்கை கடல்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்
HIGHLIGHTS
ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
ராமேஸ்வரத்திலிருந்து நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 6 விசைப்படகையும் 43 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து காங்கேசன் கடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இந்த கைது நடடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர் சங்கத் தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் விசைப்படகையும் உடனே விடுவிக்க வேண்டும், என்பன கோரிக்கையை வலியுறுத்தியும் மீனவர்களின் கைதுக்கு அழுத்தம் கொடுக்காத மத்திய மாநில அரசைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மேலும் மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக நாளை காலை ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே இலங்கை கடற்படையால் கைது செய்யபட்ட மீனவர்களையும் மீனவர்களின் படகையும் உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இந்த மீனவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தற்போது நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது, இந்த தொழிலில் நேரடியாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும் மறைமுகமாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களும் வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, இதனால் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிப்படைய கூடும் என கூறப்படுகிறது.