திருமயம் அரசு மருத்துவமனையில் டயாலிஸ் மையம்: சட்ட அமைச்சர் ரகுபதி திறப்பு
கிட்னி நோயாளிகள் அதிகரித்து வருவதால் டயாலிசிஸ் மிகவும் தேவையான சிகிச்சையாக மாறிவருகிறது
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் அண்ணா அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு மையத்தினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அண்ணா அரசு மருத்துவமனையில், சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு மையத்தினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி (05.10.2022) துவக்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் கூறியதாவது: தமிழகத்தில் நீரிழிவு (Diabetes ) மற்றும் ரத்தக்கொதிப்பு போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அதிகரித்து வருகின்றனர்.இவர்களில் கிட்னி ஃபெயிலியர் நிலையில் மாற்று கிட்னி வேண்டி காத்திருப்போர் பட்டியலில் பெரிதாகிக் கொண்டே வருகிறது. தெருவுக்கு ஒரு கிட்னி நோயாளியாவது இருக்கும் நிலை தற்போது இருக்கிறது. இது நாளை குடும்பத்தில் ஒருவர் கிட்னி நோயாளியாக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.காரணம் 1980-களில் தெருவில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருந்தது. தற்போது குடும்பத்தில் ஒருவருக்கு நீரிழிவு இருக்கிறது.
நாளுக்கு நாள் டயாலிசிஸ் தேவைப்படும் நோயாளிகள் அதிகமாகி வருவதும், டயாலிசிஸ் மிகவும் தேவையான சிகிச்சையாக மாறியிருப்பதும், இனிவரும் பத்து ஆண்டுகளில் கிட்னி நோயாளிகள் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை உணர்த்துகிறது.99 சதவிகிதம் பேர் கண்டிப்பாக தங்களுக்கு நீரிழிவு அல்லது ரத்தக் கொதிப்பு இருந்ததை கட்டுக்குள் வைக்கவில்லை என்பதால் இது போன்ற கோளாறுகள் வருகிறது.
நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு ஆகிய இரண்டு நோய்களுக்கும் முதல் எதிரி சிறுநீரகங்கள்தான், எக்காரணம் கொண்டும் நீரிழிவு மற்றும் ரத்தக் கொதிப்பை அதன் அளவுகளுக்குள் நீங்கள் வைக்காவிட்டால், கிட்னி பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புகள் மிக அதிகம். தொற்றா நோய்களான நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு ஆகிய இரண்டையும் சரி செய்ய மருத்துவரைச் சந்தித்து மருத்துவ சிகிச்சை எடுக்க வேணடும். கூடவே உணவு முறையில் மாற்றம் செய்ய வேணடும்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்களின் நலனுக்காக மருத்துவத்துறையில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் தற்போது திருமயம் அண்ணா அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு சுகாதார அமைப்பு திட்டத்தின்கீழ், தலா ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் 10 சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டிலும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.8.50 இலட்சம் தனியார் பங்களிப்புடன் ரூ.25 இலட்சம் மதிப்பில் மின்னாக்கி, கட்டிட புனரமைப்பு, மற்றும் குளிர் சாதன வசதியுடன் ஒருங்கிணைந்த சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு மையம் துவக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இப்பகுதி சிறுநீரக நோயாளிகள் சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு மேற்கொள்வதற்கு நீண்ட தூரம் சென்று வந்த நிலையில், தற்போது திருமயம் அண்ணா அரசு மருத்துவமனையிலேயே நாள் ஒன்றுக்கு 70 முதல் 80 நபர்களுக்கு சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு மேற்கொள்ள முடியும்.எனவே சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெறுவோர் இதனை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் .எஸ்.ரகுபதி அதெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் 4 நபர்களுக்கு காப்பீடு அட்டைகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, இணை இயக்குநர் ஊரக நலப் பணிகள் மரு.ராமு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம.சுப்புராம், திருமயம் அண்ணா அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மரு.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு(எ)சிதம்பரம், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.