புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கான ஆய்வுக் கூட்டம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மண்டல ஆய்வுக்கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி சு.ஜவஹர்,தலைமையில்,புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் மக்கள் தொகை, முதல்வரின் முகவரி துறையிலிருந்து வரப்பெற்ற மனுக்களின் நிலுவை விவரம், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் எண்ணிக்கை, ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் எண்ணிக்கை, ஆதிதிராவிடர் நல விடுதிகள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் கடந்த ஆண்டு விடுதிகளில் தங்கி கல்வி பயின்ற மாணாக்கர்களின் தேர்ச்சி விவரம், மயானம் மற்றும் மயானப்பாதை வசதி திட்டம், தீண்டாமை கடைப்பிடிக்காத சமூக நல்லிணக்கத்துடன் வாழும் சிறந்த கிராமங்களை தேர்ந்தெடுத்து பரிசுத் தொகை வழங்கும் திட்டம் .
பிரதம மந்திரி கிராம முன்னோடித் திட்டம், மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் நடத்தப்படுவது குறித்தும், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் மூலமாக செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி சு.ஜவஹர் கலந்தாய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில், செயல்படுத்தப்படும் திட்டங்களான, நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாட்டுத் திட்டம், தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்புத் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்டம் உள்ளிட்ட திட்டங்களின்கீழ் பயன்பெற்று வரும் பயனாளிகளின் எண்ணிக்கை குறித்தும், பயனாளிகளுக்கு வங்கி கடனுதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்க ளின் நிலை குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சரால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி இத்திட்டங்கள் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் பயன் பெறும் வகையில் அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி சு.ஜவஹர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மேலாண்மை இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் த.ஆனந்த், தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.