நேரடி தேர்வுகளை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் போராட்டம்
இந்த ஆண்டில் ஆன்லைனில் மட்டுமே பாடங்கள் கற்றுத் தரப்பட்டதால் தேர்வுகளையும் ஆன்லைன் வாயிலாக மட்டுமே நடத்த வேண்டும்
HIGHLIGHTS
ஆன்லைன் வாயிலாக பாடங்களை நடத்தி விட்டு தற்போது ஆஃப்லைனில் தேர்வு செய்ததை கண்டித்தும் ஆன்லைன் வாயிலாகவே தேர்வை நடத்த வேண்டும் என்று கூறிய புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் வாயிலாக பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா அச்சுறுத்தல் குறைவானதால் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது கல்லூரிகளில் தேர்வுகள் ஆஃப்லைனில் (நேரடியாக) நடத்தப்படும் என்று பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆன்லைன் வகுப்புகளில் பாடங்கள் கற்றுத் தரப்பட்டது. இந்த ஆண்டு ஆன்லைன் வாயிலாக மட்டுமே தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். ஆஃப்லைனில் தேர்வுகள் நடத்தப்பட கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியை சேர்ந்த 300 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.