விஜயகாந்த் வேடமிட்ட தனது ஆதரவாளருடன் மனு தாக்கல் செய்த தேமுதிக வேட்பாளர்
புதுக்கோட்டையில் தேமுதிக சார்பில் நகராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிட பரமஜோதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேடமிட்டு வந்த தனது ஆதரவாளருடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக தேமுதிக கட்சியோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி புதுக்கோட்டை நகராட்சி 5 இடங்களும், அறந்தாங்கி நகராட்சி 2 இடம் என முடிவாகியுள்ளதாக தகவல் கசிந்து வருகிறது. .இந்நிலையில் தேமுதிகவை சேர்ந்த பரமஜோதி, தான் போட்டியிடக் கேட்ட வார்டு கிடைக்காததால் இன்று தேமுதிக சார்பில் புதுக்கோட்டை நகராட்சி 42 வது வார்டில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்
அப்போது அவரது ஆதரவாளர் நாராயணனை விஜயகாந்த் வேடமிட்டு வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மாவட்டத்தில் தேமுதிக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், பரமஜோதி தேமுதிக தலைமை வழங்கக்கூடிய பி -படிவம் இல்லாமல் மனு தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு பரிசீலனை செய்யும்போது தேமுதிக தலைமை வழங்கக்கூடிய பி -படிவம் வழங்கினால் அவர் தேமுதிக அதிகாரப்பூர்வ வேட்பாளராக இருப்பார். இல்லையெனில் சுயேட்சை வேட்பாளராகவே கருதப்படுவார் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.