அரசுத் துறைகளின் திட்டப் பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
திட்டப் பணிகளை அனைத்துத் துறை அலுவலர்களும் பொதுமக்களிடம் முறையாக கொண்டு சேர்க்க வேண்டும்
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் எஸ்.கணேஷ் பல்வேறு துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் எஸ்.கணேஷ், மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு முன்னிலையில் அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (23.12.2022) கலந்தாய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனிற்காக பல்வேறு திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் ஏழை, எளிய பொதுமக்கள், விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் அவர்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்கு வழிவகை ஏற்படும். அதன்படி, வேளாண்மைத்துறையின் சார்பில் கிராமப் புறங்களில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை சிறப்பாக மேற்கொள்ள வேளாண்மைத் துறை, வேளாண் பொறியியல்துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட துறைகள் சேர்ந்து செயல்பட வேண்டும்.
ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தூய்மை பாரத இயக்கம், குடிநீர் வழங்கும் திட்டம், வருவாய்த்துறையின் சார்பில் பட்டா வழங்குவது தொடர்பாகவும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம் தேடிக் கல்வித் திட்டம், சமூக நலத்துறை சார்பில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மருத்துவத்துறை சார்பில் மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் திட்டப் பணிகள் குறித்து, துறை அலுவலர்களுடன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் எஸ்.கணேஷ் கலந்தாய்வு மேற்கொண்டார்.
எனவே அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை அனைத்துத் துறை அலுவலர்களும் பொதுமக்களிடம் முறையாக கொண்டு சேர்க்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் எஸ்.கணேஷ் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல் மற்றும் அரசுத்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.