புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்: ஆட்சியர் ஆய்வு
தேர்வு எழுதம் மாணவர்களின் வசதிக்காக குடிநீர்வசதி, கழிவறைவசதி, மின்சாரவசதி, பேருந்துவசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இன்று (05.05.2022) முதல் தொடங்கியதை தொடர்ந்து, ஸ்ரீ பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளி, தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளிகளில் பொதுத் தேர்வுகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:புதுக்கோட்டை மாவட்டத்தில் 2021 - 2022 ஆம் கல்வி ஆண்டிற்கான மே 2022, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் 05.05.2022 இன்று தொடங்கி 28.05.2022 வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வுகளை 107 அரசுப் பள்ளிகள், 07 உதவிப் பெறும் பள்ளிகள், 70 தனியார் பள்ளிகளை சேர்ந்த 10,333 மாணவிகளும், 8,999 மாணவர்களும் என 19,332 நபர்கள் தேர்வு எழுதுகின்றனர். மேலும் 397 தனித் தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர். இத்தேர்விற்காக 91 தேர்வு மையங்களும், 02 தனித் தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தேர்வுகளை சிறப்பான முறையில் நடத்திட 160 பறக்கும் படை மற்றும் நிலையான உறுப்பினர்களை கொண்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 11 வினாத்தாள் கட்டுகாப்பு மையங்களும், 24 வினாத்தாள், விடைத்தாள் கொண்டு செல்லும் வழித்தடங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தேர்வு மையங்களில் அரசு தெரிவித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றப்பட்டு வருகிறது.
மேலும் தேர்வு எழுதம் மாணவர்களின் வசதிக்காக குடிநீர்வசதி, கழிவறைவசதி, மின்சாரவசதி, பேருந்துவசதி உள்ளிட்டவைகள் ஏற்படுத்தப்பட்டு தேர்வுகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன என்றார் ஆட்சியர் கவிதாராமு.
இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சா.சத்தியமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர்; அபிநயா, வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.