தேசிய ஒற்றுமை நாள்- ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம்: அரசு சார்பில் உறுதி ஏற்பு
National Unity Day -சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாலும், நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசமாகும்
HIGHLIGHTS
National Unity Day -புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி மற்றும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் தொடர்பான உறுதிமொழியினை, மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதாராமு தலைமையில் அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபபாய் படேலில் பிறந்த நாளை குறிக்கும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 31ஆம் தேதி தேசிய ஒற்றுமை தினமாகக் (ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ்-National Unity Day) கொண்டாடப்படுகிறது. இவர் சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராவார். 1947-49க்கு இடைப்பட்ட காலத்தில் 550 சுதந்திர மன்னர் மாநிலங்களை (சுதேச அரசுகள்) ஒருங்கிணைத்து இந்தியாவை வலுவான நாடாக உருவாக்கினார்.
சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளினை நினைவு கூறும் வகையில் "ஒற்றுமைக்கான ஓட்டம்" (Run for Unity) என்ற தலைப்பில் நாடு முழுவதும் தொடர் ஓட்டம் நடத்தப்படுகிறது. மேலும் அவரது பிறந்த நாளை (அக் 31.) அன்று தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி அனுசரிக்கப்படுகிறது. அதன்படி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் அரசு அலுவலர்கள் உறுதி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும் இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமார உறுதி யளிக்கிறேன்.சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாலும், நடவடிக்கைகளாலும் சாத்தியமாக் கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நான் இந்தஉறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப் பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன் என மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம்31.10.2022 முதல் 06.11.2022 வரை கடைபிடிக்கப்படுவதைத் தொடர்ந்து பின் வரும் உறுதிமொழியை அனைவரும் வாசித்து ஏற்றுக் கொண்டனர்.நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன். அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நம்புகிறேன்.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மைமற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான்நன்கறிவேன்.எனவே, நான் அனைத்து செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும்; இலஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும்.
அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்துவேன் என்றும் பொதுமக்களின் நலனுக்காக பணியாற்றுவேன் என்றும்ரூபவ் தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாக செயல்படுவேன் என்றும், ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்குத் தெரியப்படுத்துவேன் என்றும் உறுதி கூறுகிறேன் என மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில் அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா, மாவட்ட ஆட்சியரக அலுவலகமேலாளர் (நீதியியல்) விஸ்வநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2