மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கிராம , ஒன்றிய, நகர பஞ்சாயத்து, நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் இன்று (09.09.2022) நடைபெற்றது.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு அதன் காலமுறைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 18-வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளை தடுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, குழந்தைகள் தொடர்புடைய துறைத் தலைவர்களை ஒருங்கிணைத்து மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுவின் காலமுறைக் கூட்டம் நடைபெற்றது.
இக்குழுக் கூட்டத்தில் குழந்தைகள் தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் இறுதியில் குழந்தைகள் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு அனைத்து துறைத் தலைவர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவரால் அறிவுறுத்தப்பட்டது. மேலும் கிராம அளவிலான, ஒன்றிய அளவிலான, நகரப் பஞ்சாயத்து அளவிலான மற்றும் நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று துறைத்தலைவர்கள் மூலம் சுற்றறிக்கை அனுப்பிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் குழந்தைகள் தொடர்புடைய துறைகளான நீதித்துறை, காவல்துறை, சமூக நலத்துறை, கல்வித்துறை, மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை, தொழிலாளர் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை, மகளிர் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், தன்னார்வ தொண்டு நிறுவனம், சைல்டுலைன், குழந்தைகள் இல்லம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர், ஒன்றியக்குழுத் தலைவர்கள், சமூகப்பாதுகாப்புத்துறை சார்ந்த நன்னடத்தை அலுவலர், இளைஞர் நீதி குழுமம், குழந்தைகள் நலக்குழு ஆகிய துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, கூடுதல் மாவட்ட நீதிமன்ற நடுவர் பாபுலால், கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெரினா பேகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரா.அனிதா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.