பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வங்கி செயலாளர் நீலகண்டன் தூக்கிட்டு தற்கொலை
வங்கி தலைவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்
HIGHLIGHTS
புதுக்கோட்டை அருகே கீரனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் பணிபுரிந்து மோசடி வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வங்கி செயலாளர் நீலகண்டன் இன்று தனது வீட்டின் கழிவறையில் தூக்கு மாட்டி தற்கொலை கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் நகை கடன் வழங்கியதில் 1.08 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வங்கி செயலாளர் நீலகண்டன் நகை மதிப்பீட்டாளர் கனகவேல் மற்றும் கண்காணிப்பாளர் சக்திவேல் ஆகிய மூன்று பேரையும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
சென்னையிலுள்ள கூட்டுறவுத்துறை பதிவாளர் அலுவலகத்தில் இவர்கள் 3 பேரும் மீதும் நாளை விசாரணை நடைபெற இருந்த நிலையில், வங்கி செயலாளர் நீலகண்டன் இன்று தனது வீட்டின் கழிவறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.நீலகண்டன் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாகவும், வங்கி தலைவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட வங்கி செயலாளர் நீலகண்டனின் உடலை கீரனூர் போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.