கவுரவ விரிவுரையாளருக்கு கொரோனா: உதகை அரசு கலைக் கல்லூரி மூடல்
அரசு கலைக்கல்லூரி மூடப்பட்டு, மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு வருகை தர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
உதகை அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் மற்றும் நேரடியாக நடந்து வருகிறது. இந்த பணியில் ஈடுபட்ட வணிகவியல் பாடப்பிரிவு கவுரவ விரிவுரையாளர் ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் உதகை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், தொற்று பாதிப்பு உறுதியானது.
தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையாக உதகை அரசு கலைக்கல்லூரி மூடப்பட்டு, மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு வருகை தர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் என மொத்தம் 153 பேரிடம் இருந்து சுகாதார குழுவினர் மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
பரிசோதனை முடிவு வரும் வரை 2 நாட்கள் மாணவ-மாணவிகளுக்கு இளங்கலை 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு, முதுகலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது.