உதகையில் கல்லறை திருநாள் உறவினர்கள் நினைவஞ்சலி
இறந்தோருக்காக குறிக்கப்பட்ட வசனங்கள் பைபிளில் இருந்து வாசிக்கப்பட்டு நற்செய்தி கூறப்பட்டது.
HIGHLIGHTS
கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2-ந் தேதி கல்லறை திருநாளாக அனுசரித்து வருகின்றனர். இந்த நாளில் இறந்த ஆன்மாக்களை நினைவு கூர்ந்து, அவர்களுக்காக பிரார்த்தனை செய்வது வழக்கம். கல்லறை திருநாளை ஒட்டி உதகை மேரீஸ்ஹில் புனித மரியன்னை ஆலயத்தில் நீலகிரி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இறந்தவர்களுக்காக பிரார்த்தனை ஏறெடுக்கப்பட்டது. இறந்தோருக்காக குறிக்கப்பட்ட வசனங்கள் பைபிளில் இருந்து வாசிக்கப்பட்டு நற்செய்தி கூறப்பட்டது. காந்தல் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்களது இறந்த உறவினர்கள் மற்றும் முன்னோர்களது கல்லறைகளுக்கு சென்றனர். அங்கு இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் கல்லறையில் மலர்கள், மெழுகுவர்த்திகள் வைத்து அலங்கரித்தனர். அவர்கள் குடும்பத்தினருடன் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.