/* */

கொல்லிமலை மக்களுக்கு ஒரேஇடத்தில் அரசு சேவை: 20 சிறப்பு முகாம்கள்

கொல்லிமலை யில் வாழும் மக்களுக்கு, அரசின் சேவைகள் ஒரே இடத்தில் வழங்க, 20 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கொல்லிமலை மக்களுக்கு ஒரேஇடத்தில் அரசு சேவை: 20 சிறப்பு முகாம்கள்
X

கொல்லிமலை மக்களுக்கு அரசின் சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்துவது சம்மந்தமான ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசினார்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் நூற்றுக்கணக்கான மலை கிராமங்களில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும், தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காக கொல்லிமலை பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தலா 1000 பேர் கலந்து கொள்ளும் வகையிலான சிறப்பு முகாம்கள் நடத்திட மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.

இதில், கொல்லிமலை பகுதி மக்களுக்கு தேவையான சாதி சான்றிதழ்கள் உள்ளிட்ட வருவாய்த்துறையின் சேவைகள், மாவட்ட வழங்கல் துறையின் சார்பில் ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் விண்ணப்பித்தல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட சேவைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள், நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், பொதுமக்களிளுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்தல், ஆகிய சேவைகள் சம்மந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம், கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:

கொல்லிமலை மலைவாழ் மக்களின் சுகாதாரம் மற்றும் கல்வி மேம்பாட்டிற்காகவும், சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. முதலாவது முகாம் வருகின்ற 28ம் தேதி செம்மேடு, வல்வில் ஓரி அரங்கிலும், 30ம் தேதி பெரக்கரை நாடு, ஒத்தக்கடையிலும் முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

கொல்லிமலை பகுதியில் 1 அரசு ஆஸ்பத்திரி, 3 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 16 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் தங்களது துறை மூலமாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இந்த முகாம்கள் நடைபெறுவது குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில், மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன், சுகாத்துறை துணை இயக்குநர் பிரபாகரன், சப் கலெக்டர் மஞ்சுளா, மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், பழங்குடியினர் நல அலுவலர் ராமசாமி, தாசில்தார் கிருஷ்ணன், கொல்லிமலை பிடிஓ நடராஜன், கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய சேர்மன் மாதேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Dec 2021 2:00 AM GMT

Related News