நாமக்கல் நகராட்சியில் திடக்கழிவு மேலாண் திட்ட விழிப்புணர்வு முகாம்
நாமக்கல் நகராட்சி பகுதியில் நடைபெற்ற திடக்கழிவு மேலாண்மை திட்ட விழிப்புணர்வு முகாமில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
HIGHLIGHTS
நாமக்கல் நகராட்சி பகுதியில், தமிழக அரசின் தூய்மையான நகரங்களுக்கான, மக்கள் இயக்கம் என்ற திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும், இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில், பொதுமக்களிடையே திடக்கழிவுகள் மேலாண் திட்டம் மற்றும் என் குப்பை எனது பொறுப்பு என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, திடக்கழிவுகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என பிரித்து வழங்குதல், பொது இடங்களில் குப்பை கொட்டாமல் இருத்தல் மற்றும் ஒருமுறை மட்டும் உபயோகித்துதூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, நாமக்கல்லில் நேற்று நடைபெற்றது.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அருகில் நடந்த நிகழ்ச்சிக்கு, நகராட்சி கமிஷனர் சுதா தலைமை வகித்தார். துணைத்தலைவர் பூபதி முன்னிலை வகித்தார். தலைவர் கலாநிதி துவக்கி வைத்தார். நகராட்சிக்கு உட்பட்ட 13, 17, 25 மற்றும் 29 ஆகிய 4 வார்டுகளில், முழுவதுமாக வீடு வீடாக சென்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், அவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
தொடர்ந்து, சின்னமுதலைப்பட்டியில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நகராட்சி கவுன்சிலர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர், தன்னார்வலர்கள் உள்பட, 500க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.