தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமன உத்தரவு: கலெக்டர் வழங்கல்
மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளிகளின் பெற்றோர் வீட்டிலிருந்தபடியே பணிபுரியும் வகையில், வேலைவாய்ப்பு பணி உத்தரவுகளை கலெக்டர் வழங்கினார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில், தனியார் துறை நிறுவனங்களும் - தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாகச் சந்திக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 13 வேலையளிக்கும் நிறுவனங்கள், 3 திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டன. அந்நிறுவனங்கள் தங்களுக்கான மேனேஜர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், கேசியர், டைப்பிஸ்ட், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்ட்டென்ட் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்தனர். இம்முகாமில் 54 வேலைநாடுநர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளிகளின் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், அவர்களை பராமரிக்கும் பொருட்டும் வேலையைத் தவிர்த்து தங்கள் குழந்தைகளை கவனித்து வரும் நிலையில், குழந்தைகளைக் கவனித்து கொண்டே பணியாற்றும் வகையில் தனியார் நிறுவனத்தினர் பணி வாய்ப்பை வழங்கி உள்ளனர். அவ்வாறான மாற்றுத் திறனாளிகளின் பெற்றோர் 11 பேர் கலந்துகொண்டனர். இதில் 7 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங் பணி நியமன உத்தரவுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் டிஆர்ஓ கதிரேசன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.