/* */

கேரளாவில் பறவைக்காய்ச்சல் உறுதி : நாமக்கல் கோழிப்பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை..!

கேரளாவில் பறவைக்காய்ச்சல் தாக்கம் உறுதியாகியுள்ளதால் நாமக்கல் கோழிப்பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கேரளாவில் பறவைக்காய்ச்சல் உறுதி :  நாமக்கல் கோழிப்பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை..!
X

பறவைக்காய்ச்சல் (கோப்பு படம்)

நாமக்கல் :

கேரள மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையாளர்கள் தீவிர நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் குட்டநாடு பகுதியில் உள்ள, வாத்து பண்ணைகளில், ஏராளமான வாத்துகள் தொடர்ச்சியாக உயிரிழந்தன. இதனையடுத்து இறந்த வாத்துகளின் மாதிரிகளை சேகரித்து சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சோதனை முடிவில் இறந்த வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் (எச்5என்1) நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அப் பகுதிகளில் உள்ள சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வளர்க்கப்படும் வாத்துகள், கோழிகள் மற்றும் காடை போன்ற பறவையினங்களை அழிக்கும் பணியில் கேரள மாநில கால் நடை பராமரிப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் இருந்து வாத்து மற்றும் கோழிகளை வெளியே எடுத்துச்செல்லவும், அவற்றின் இறைச்சி மற்றும் முட்டைகளை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதிக அளவில் கோழிப்பண்ணைகள் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் பண்ணையாளர்கள் தங்கள் பண்ணைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். கோழி பண்ணையில் உயிர் பாதுகாப்பு (பயோ செக்யூரிட்டி) முறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதியில் சுமார் 1000 முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 5 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தற்போது, கோழிகளுக்கு கிருமிநாசினி மருந்து தெளித்தல் உள்ளிட்ட நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை பண்ணையாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கோழிப்பண்ணை வாசலில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கலந்த தண்ணீர் வைக்கப்பட்டு வெளி ஆட்களும், வாகனங்களும் அதன் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

வெளியில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளித்த பின்னரே பண்ணைக்குள் அனுமதிக்கின்றனர். நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகள் மிகவும் நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளனர். மேலும், இங்கு நிலவும் தட்பவெப்பநிலை மற்றும் பண்ணைகளில் பின்பற்றப்படும் பயோ செக்யூரிட்டி முறைகளால், பறவைக் காய்ச்சல் நோய் கிருமிகள், நாமக்கல் பகுதியில் பரவ வாய்ப்பு இல்லை என வல்லுனர் குழு தெரிவித்து இருந்தாலும், நாமக்கல் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பண்ணையாளர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

Updated On: 22 April 2024 11:51 AM GMT

Related News