தமிழகம் முழுவதும் 5,001 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை: சிவசேனா கட்சி மாநில அமைப்பாளர்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தமிழக முழுவதும் 5,001 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜை செய்யப்படும்.
HIGHLIGHTS
நாமக்கல் அருகே கருங்கல்பாளையத்தில், மக்கள் நல சேவை இயக்கம் சார்பில், பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், சிவசேனா கட்சியின் மாநில அமைப்பாளர் பாலாஜி கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் கூறியதாவது:
வரும் ஆக. 31ம் தேதி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும், சிவசேனா கட்சி சார்பில் 5,001 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகின்றன. கொரோனா ஊரடங்கு காலத்தில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய, ஊர்வலம் நடத்த தமிழக அரசு தடை விதித்தது. தடையை மீறி சிவசேனா கட்சி ஊர்வலம் நடத்தி விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்தது. இந்த ஆண்டு, கொரோனா ஊராடங்கு இல்லாததால், தமிழக அரசு விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கும் என நம்புகிறோம். அனுமதி மறுத்தால், தடையை மீறி ஊர்வலம் நடத்தி, விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்.
உத்தேவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி தான் உண்மையான சிவசேனா. சிவசேனாவை, இரு அணியாக பிரித்ததற்கு பா.ஜ.க தான் காரணம். கூட்டணி கட்சியாக இருந்தபோது, ஒப்பந்த முறைப்படி பா.ஜ.க. நடந்து கொள்ளவில்லை. மத்திய அரசு அமலாக்க துறையை பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளின் மத அடக்கு முறை செய்து நசுக்குகிறது. பா.ஜ.க நடத்தி வரும் இச்செயலை, சிவசேனா கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்று கூறினார்.