சி.பி.சி.எல். நிலம் எடுப்பதை கண்டித்து நாகையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
விவசாய விளை நிலங்களை கையகப்படுத்தும் சி.பி.சி.எல். நிர்வாகத்தை கண்டித்து நாகையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல், நாகை மாவட்டம் நாகூர், பனங்குடி, முட்டம் ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது. இதன் விரிவாக்கத்திற்காக, பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம், உத்தமசோழபுரம், முட்டம் ஆகிய ஊராட்சிகளில் 622 ஏக்கர் நில எடுப்பு பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்பகுதி விவசாயிகள், இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பனங்குடி கோபுராஜபுரம் ஆகிய நான்கு ஊராட்சி விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, விவசாய விளை நிலங்களை கையகப்படுத்தும் சி.பி.சி.எல். நிர்வாகத்தையும் மற்றும் அதற்குத் துணைபோகும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவித்த பகுதியில் உள்ள விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்றும் இதனை தமிழக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தினர்.