கே.ஆர்.பி. அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும்: விவசாயிகள்
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
HIGHLIGHTS
இது தொடர்பாக, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராமகவுண்டர் தலைமையிலான விவசாயிகள், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம், தற்போது 43 அடியைத் தாண்டியுள்ளது. வழக்கமாக ஜூன் மாத இறுதிக்குள் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். அப்படி தண்ணீர் திறந்தால், நெல்லில் நோய் தாக்காது. உரம் அதிகம் தேவைப்படாது. மழைக்கு முன் அறுவடை முடிந்துவிடும். நல்ல மகசூலும் கிடைக்கும்.
தற்போது மாவட்டம் முழுவதும் பெரும்பாலான விவசாயிகள் வயலில் நாற்று விட்டு எருவை கொட்டி வருகின்றனர். இப்போது உள்ள தண்ணீர் பாசனத்திற்குதிறக்கப்பட்டால், 105 நாட்களுக்கு வரும். ஆனால் எங்களுக்கு 60 நாட்களுக்கு தண்ணீர் இருந்தாலே போதும். காரணம் இன்னும் 60 நாட்களுக்குள் வழக்கமான மழை பெய்து ஆற்றில் நீர் நிரம்பி உபரியாக தண்ணீர் தேவைக்கு அதிகமாக கிடைக்கும்.
இதுவரை முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காமல் வறண்டு போனதாக வரலாறே இல்லை. இந்த போகத்தில் சன்னரக நெல் விளைவிக்கப்படுகிறது. எதிர்பாராத காரணத்தால் மழை வராமல் காய்ந்து போனாலும் இழப்பீடு கோரமாட்டோம் என உறுதி அளிக்கின்றோம். எனவே முதல் போக சாகுபடிக்கு உடனடியாக கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் திறக்க ஆவன செய்ய வேண்டும் என, மனுவில் தெரிக்கப்பட்டுள்ளது.