பயோமெட்ரிக் முறையால் கொரோனா அபாயம்?
ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
HIGHLIGHTS
ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதிவேகம் எடுத்துள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் மற்றும் சுகாதாரத்துறையினர் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றுப் பரவலே இல்லாத நிலையில் தற்போது மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து 600க்கும் மேற்பட்டோர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்து ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். ரேஷன் பொருட்களை வாங்குவதற்காக பயனாளிகள் கைரேகைகளை வைத்த பின்பு அடுத்தடுத்து பயனாளிகள் கைரேகைகளை வைப்பதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் முகக் கவசம் அணியாமலும் வருவதால் கொரோனா தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே, பயோமெட்ரிக் முறைக்கு இடைக்கால தடை விதித்து ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் முறையை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.