திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக கம்பத்தில் 'கனெக்ஷன்': மின்சாரம் தாக்கி ஒருவர் சாவு
கிருஷ்ணகிரி அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் எடுக்க முயன்றவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி மாவட்டம், வடுகம்பட்டி அருகே ஜாகிர் நாற்றம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் தன்ராஜ் (61). இவரது மகன் விஷ்னு (31) காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆயுதப்படை காவலாராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 11ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் தனது மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை சொந்த வீட்டில் நடத்த திட்டமிட்ட தன்ராஜ், வீட்டை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அதற்காக வீட்டில் ஃபோக்கஸ் லைட் அமைக்க பெத்ததாளப்பள்ளியில் சவுண்ட் சர்வீஸ் நடத்தி வரும் கிருஷ்ணன் (51) என்பவரை அழைத்து உள்ளார். மேலும் அந்த ஃபோக்கஸ் லைட் அமைக்க வீட்டில் இருந்து மின்சாரம் எடுக்காமல் அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்து நேரடியாக மின்சாரம் எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
இதனால் கிருஷ்ணன் ஃபோக்கஸ் லைட் அமைக்க திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்க உள்ள இடத்தின் அருகே இருந்த கம்பத்திலிந்து மின்சாரம் எடுக்க திட்டமிட்டு ஒயரை கொக்கி போல் அமைத்து மின் கம்பியின் மீது வீசியுள்ளார். ஆனால் அந்த ஒயர் தவறுதலாக உயர் மின் அழுத்தம் கொண்ட மின் கம்பியில் பட்டு மீண்டும் கிருஷ்ணன் மீது விழுந்துள்ளது. இதனால் கிருஷ்ணன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணனின் உறவினர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்ததுடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த இருந்த தன்ராஜின் வீட்டின் மீது கற்களை வீசி தாக்கி உள்ளனர். மேலும் உயிரிழந்த கிருஷ்ணனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கூறி இறந்தவரின் உடலுடன் தன்ராஜ் வீட்டை முற்றுகையிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜு தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் ஆயுதப்படை காவலர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக குவித்தனர்.
இந்த நிலையில் கிருஷ்ணனின் உறவினர்கள் உரிய இழப்பீடு வழங்கினால் தான் உடலை எடுக்க அனுமதிப்போம் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தன்ராஜ் இடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இழப்பீடு வழங்குமாறு அறிவுறுத்தினர். இதனையடுத்து, தன்ராஜ் 7 லட்சம் ரூபாய் இழப்பீடாக இறந்தவர் குடும்பத்திற்கு வழங்குகிறேன் என ஒப்புக்கொண்டதாக கூறப்படுகின்றது. இழப்பீடு வழங்க தன்ராஜ் ஒப்புக்கொண்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். மின்சாரம் தாக்கி உயிரிழந்த கிருஷ்ணன் உடல் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கள்ளத்தனமாக மின்சாரம் எடுக்க முயற்சி செய்து ஒருவர் பலியான நிலையில் அது இரு சமூகத்திற்கு இடையே கலவரமாக மாறிவிடும் என்ற அச்சம் அங்கு உள்ள மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தியது.