குமரி வள்ளவிளை அம்மன் கோவில் தீமிதி திருவிழா: பக்தர்கள் தரிசனம்
குமரியில் வள்ளவிளை அம்மன் கோவில் ஊர்பவனி மற்றும் தீமிதி திருவிழா பக்தி பரவசத்துடன் கோலாகலமாக நடந்தது.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம் வள்ளவிளை ஶ்ரீ ராஜராஜேஸ்வரி இசக்கியம்மன் கோவில் திருவிழா கடந்த 14 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பல்வேறு விழாக்களுடன் நடந்து வந்தது.
இந்நிலையில் 10 ம் திருவிழா நாளான இன்று அம்மன் சுவாமிகள் இருவரும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி ஊர் பவனி வந்தார். முன்னதாக செண்டை மேளம், நய்யாண்டி மேளம், தாலப்பொலி, விளங்குகெட்டு, காவடி கட்டுகளுடன் ஊர்வலம் கோலாகலமாக நடந்தது.
கோவில் வளாகத்தில் இருந்து துவங்கிய இந்த ஊர்வலம் மேடவிளாகம், கண்ணனாகம் சந்திப்பு, இளம்பாலம் முக்கு வழியாக கோவில்வளாகம் வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் விரதம் மேற்கொண்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இறங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
தொடர்ந்து வாணவேடிக்கையுடன் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவுற்றது. அதனை தொடர்ந்து இரவு 12 மணிக்கு குருதி பூஜை கொடுக்கப்பட்டது. இந்த விழாவில் தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.