குமரியில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு
மீன் பிடிக்கும் போது மின்னல் தாக்கியதில் குமரி மீனவர் பலியானார்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம் இனையம் சின்னத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த குமார் என்பவரின் கட்டுமர படகில் அதே ஊரை சேர்ந்த 4 மீனவர்கள் இன்று காலை தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் கரை பகுதியில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்த போது திடீரென மின்னல் தாக்கியதில் படகின் ஓரம் இருந்து மீன்பிடித்து கொண்டிருந்த பெலன் (35) என்ற மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த மீனவரின் உடலை சக மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர் மேலும் இது குறித்து காவல்துறைக்கும் தகவல் அளித்தனர், தகவலின் பேரில் சம்பவ இடம் வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் இனையம் சின்னத்துறை மீனவ கிராமத்தில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.