குமரியில் கனமழையால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
குமரியில் தொடரும் கனமழை காரணமாக, பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், சுசீந்திரம், ஆரல்வாய்மொழி, தக்கலை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் , இன்று அதிகாலை தொடங்கிய கனமழையானது சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. மாவட்டத்தின் மலையோர பகுதிகளிலும் தொடரும் கனமழை காரணமாக, மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
மேலும், அணைகளில் இருந்து வினாடிக்கு 2200 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது, இதன் காரணமாக அணைகளில் இருந்து நீர் வெளியேறும் ஆற்று பகுதிகளில் மிகவும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
இதனிடையே மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, இன்று ஒருநாள் குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி, மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டு உள்ளார்.