கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றவில்லை என்றால் கடும் நடவடிக்கை - ஜோதி நிர்மலாசாமி ஐ.ஏ.எஸ்.
முக கவசம் அணியாமல் தனி மனித இடைவெளி பின்பற்றாமல் அலட்சியம் காட்டினால் கடும் நடவடிக்கை - ஜோதி நிர்மலாசாமி ஐ.ஏ.எஸ்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது. நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணிகளை ஆய்வு செய்து தேவையான ஆலோசனைகளை வழங்க தனி அதிகாரிகளை தமிழக அரசு நியமித்து உள்ளது,
அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பெண்கள் மேம்பாட்டு நிறுவன இயக்குனர் ஜோதி நிர்மலா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அரவிந்த், காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை பார்வையிட்ட அவர், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கோவிட் கேர் சென்டர்களுக்கும் நேரடியாக சென்று பார்வையிட்டார்,
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், குமரி மாவட்டத்தில் கொரோனாவை எதிர்கொள்வதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது, மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு அதிகாரிகள் தயாராக இருக்கிறார்கள். தேவையான படுக்கை வசதிகளுடன் தேவையான மருந்துகளும் மருத்துவ மனைகளில் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பொதுமக்கள் நோய் தாக்கம் குறித்து அலட்சியம் காட்டாமல் விழிப்புடன் இருக்க வேண்டும். முகக்கவசம் அணியாமல் தனி மனித இடைவெளி பின்பற்றாமல் அலட்சியம் காட்டினால் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.