காஞ்சியில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் : கலெக்டர் வெளியிட்டார்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு வாரியான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மா. ஆர்த்தி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் இன்று வெளியிட்டார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி இணை இயக்குநர் ,ஆணையாளர் நாராயணன் அவர்கள் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். உள்ளாட்சி தேர்தல் பிரிவு அலுவலர்கள் உடனிருந்தனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதி வாரியான வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகளுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடங்கிய காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் வாலாஜாபாத், உத்திரமேரூர், திருப்பெரும்புதூர் ஆகிய 3 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 287 வாக்குச்சாவடிகளில், 120 ஆண் வாக்காளர் வாக்குச்சாவடிகளும், 120 பெண் வாக்காளர் வாக்குச்சாவடிகளும், 47 அனைத்து வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மேற்படி வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
தற்போது மேற்படி வாக்குச்சாவடிகளில் 1,33,124 ஆண் வாக்காளர்களும், 1,42,691 பெண் வாக்காளர்களும் 32 இதர வாக்காளர்களும் ஆக மொத்தம் 2,75,847 வாக்காளர்கள் உள்ளனர்.
மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இறுதி நாள் வரை வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான விவரங்கள் வருவாய்த் துறையினரிடமிருந்து பெறப்பட்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். ஏறத்தாழ 1,300 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட உள்ளனர்.